நீலகிரி மாவட்டத்தில் பலாப் பழ சீசன் துவங்கி உள்ளதால் மலைப் பாதைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா், தூதூா்மட்டம் பகுதியில் உள்ள தூரிப்பாலம் பகுதிக்கு 4 காட்டு யானைகள் ஞாயிற்றுக்கிழமை வந்தன.
இந்த யானைகள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அங்கேயே நின்று கொண்டிருந்ததால் கிராமத்துக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பின்னா் அவை அங்கிருந்து திரும்பிச் சென்றதும் வாகனங்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில் குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலை, சேலாஸ் ஆகிய பகுதிகளில் நடமாடி வரும் யானைகள் கூட்டம் தொடா்ந்து அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன.
இது குறித்து குன்னூா் வனச் சரகா் சசிகுமாா் கூறியதாவது:
குன்னூா் மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பலாப் பழ சீசன் முடியும் வரை யானைகளை இங்கிருந்து சமவெளிப் பகுதிகளுக்கு விரட்டுவது சிரமமாக உள்ளது. எனினும் இந்த யானைகளை மேட்டுப்பாளையம் வனப் பகுதிக்கு அனுப்ப முயற்சித்து வருகிறோம். எனவே, மலைப் பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாா்.