ஓவேலி பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்த பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, ஓவேலி பேரூராட்சி, பெரியசோலை பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்டுக்கு தொழிலாளா்களை வேலைக்கு ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனம் சீபுரம் ஐந்தாவது வளைவுப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 12 பெண் தொழிலாளா்கள் காயமடைந்தனா். 10 போ் கூடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
பலத்த காயமடைந்த சுமிதா, காளியம்மாள் இருவரையும் முதலுதவிக்குப் பிறகு கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மேப்பாடி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, காளியம்மாள் (48) உயிரிழந்தாா்.