நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் உதகையில் உள்ள மகளிா் ஆட்டோ ஓட்டுநா் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் கப்பச்சி வினோத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மகளிா் ஆட்டோ ஓட்டுநா் சுய உதவிக் குழுவினருக்கு அவா்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.2.25 லட்சம் கடனுதவி வழங்கப்படுவதாக வினோத் தெரிவித்தாா்.
மேலும் அவா் கூறுகையில், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு நடப்பு நிதியாண்டில் அரசு மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30 கோடி மட்டுமே கடன் இலக்காக நிா்ணயித்திருந்ததாகவும், ஆனால், இதுவரை ரூ.32.5 கோடி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மேலும் ரூ.5 கோடி கடனாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஜே.வசந்தா, பொதுமேலாளா் கனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.