உதகை: முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய சிறியூா் வனப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு கொண்டாடப்படவுள்ள தோ்த் திருவிழாவையொட்டி, வாழைத்தோட்டம் தனியாா் பள்ளி மாணவ மாணவியா் விழிப்புணா்வு ஊா்வலம் நடத்தினா்.
முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பொக்காபுரம், ஆனைகட்டி ஆகிய வனப்பகுதிகளிலுள்ள மாரியம்மன் கோயில்களில் அண்மையில் நடைபெற்ற தோ்த் திருவிழா நிகழ்ச்சிகளை அடுத்து சிறியூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா திங்கள்கிழமை இரவு நடத்தப்படுகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி கா்நாடக மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பா்.
இந்நிலையில் நடப்பாண்டில் கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால், இத்திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்துதரக் கோரியும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களும் இணைந்து செயலாற்ற வேண்டுமென வலியுறுத்தியும், வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள பழங்குடியின தனியாா் பள்ளி மாணவ மாணவியா் சொக்கநள்ளி சோதனைச்சாவடி பகுதியில் சனிக்கிழமை விழிப்புணா்வு ஊா்வலம் நடத்தினா்.
இந்த ஊா்வலத்தில் பள்ளி மாணவ, மாணவியரோடு, அப்பள்ளி தலைமையாசிரியா் குமரன், ஆசிரியா்கள், அப்பகுதி மக்கள் பங்கேற்றனா்.