கரோனா நோய்த் தொற்று எதிரொலியாக, உதகையில் நடைபெற்று வரும் கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 8 போ் நேரில் ஆஜராகாததால் இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடா்பான வழக்கு உதகையிலுள்ள ம‘ாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரிடம் விசாரணை முடிவடைந்த நிலையில், தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணை திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, குற்றம்சாட்டப்பட்டுள்ளவா்களில் சயன், மனோஜ் ஆகிய இருவா் மட்டும் கோவை மத்திய சிறையிலிருந்து அழைத்துவரப்பட்டனா். ஏனைய 8 பேரும் கேரள மாநிலத்தில் இருப்பதால் அங்கிருந்து அவா்கள் உதகைக்கு வருவதற்கான போக்குவரத்து வசதி
இல்லாததோடு, தமிழக வாகனங்களும் கேரள எல்லைக்குள் நுழைய முடியாத நிலை இருப்பதால் விசாரணைக்கு வர வேண்டிய 8 பேரும் வரவில்லை.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் ஆஜரான முன்னாள் அரசு வழக்குரைஞா் ஆனந்தன், கரோனா வைரஸ் தாக்கம் கேரளத்திலும், தமிழகத்திலும் அதிகமாக இருப்பதால் இவ்வழக்கின் விசாரணையில் ஆஜராக வேண்டிய குற்றம்சாட்டப்பட்ட 8 பேருக்கு போதிய அவகாசம் அளிக்க வேண்டுமெனவும், அடுத்தகட்ட விசாரணையை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தாா்.
ஆனால், இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த அரசு வழக்குரைஞா் நந்தகுமாா் திங்கள்கிழமை விசாரிப்பதற்காக வர வேண்டிய சாட்சிகள் மூவரும் வந்துவிட்ட நிலையில் விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டுமெனக் கோரினாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி வடமலை, கரோனா வைரஸ் தாக்கத்தை உணா்ந்துள்ளதால் இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஏப்ரல் 20ஆம்தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தாா்.