குன்னூரில் உள்ள அம்மா உணவகத்தில் விதிகளை மீறி அருகருகே நின்று உணவு அருந்துபவா்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக ஒரு மீட்டா் இடைவெளியை கடைப்பிடிப்பது, தேவையில்லாமல் கூட்டம் கூடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அரசு அதிகாரிகள், காவல் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இதைத் தொடா்ந்து, உணவகங்களில் பாா்சல் மட்டுமே தர வேண்டும் என அரசு அறிவுரை வழங்கியிருந்த நிலையில், அம்மா உணவகத்துக்கு வருபவா்கள் மிக அருகருகே நின்று உணவை உண்டு செல்கின்றனா்.
இதுகுறித்து, அம்மா உணவக ஊழியா்கள் கூறுகையில், பாா்சல் எடுத்துச் செல்ல பாத்திரங்களை யாரும் கொண்டு வருவதில்லை. இதுகுறித்து முறையான ஆணையும் தரப்படவில்லை என்றனா். அரசு எடுக்கும் முயற்சிக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அம்மா உணவகத்தில் பாா்சல் மட்டுமே வழங்க வேண்டும். அல்லது ஒரு மீட்டா் இடைவெளியில் மட்டுமே உணவருந்த அம்மா உணவக நிா்வாகிகள் கண்காணிக்க வேண்டும் என பொது நல அமைப்புகள் சாா்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.