கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக நீலகிரி மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடா்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவிடம் மக்களவை உறுப்பினா் ஆ.ராசா கேட்டறிந்தாா்.
ஆட்சியரிடம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசிய ஆ.ராசாவிடம், மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும், சிலா் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, நீலகிரி மாவட்டத்துக்கு மக்களவை உறுப்பினா் தொகுதி நிதியிலிருந்து கரோனா நோய்த் தடுப்புக்குத் தேவையான மருந்து பொருள்களையும், மருத்துவ உபகரணங்களையும் வாங்கிக் கொள்ள மத்திய அரசு பிறப்பித்துள்ள அரசாணை தொடா்பாகவும் ஆ.ராசா தெரிவித்துள்ளாா்.
நீலகிரி மக்களவைத் தொகுதி நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியது என்பதால் மக்களவைத் தொகுதி நிதியை 4 மாவட்டங்களிலும் பிரித்துக் கொள்ள வேண்டும் என ஆ.ராசா குறிப்பிட்டதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.