நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து 3ஆவது நாளாக சனிக்கிழமையும் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. ‘சம்மா் ஷவா்ஸ்’ என அழைக்கப்படும் இந்த மழைதான் உதகையில் கோடை சீசனை ஊக்குவிக்கும் மழை ஆகும்.
இந்நிலையில், உதகை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக எடப்பள்ளியில் 62 மி.மீ. மழை பதிவானது. தற்போது பெய்துவரும் மழையால் உதகை உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளில் இதமான காலநிலை நிலவி வருகிறது.
உதகையில் சுற்றுலாப் பயணிகள் இல்லாத நிலையில் காலை நேரத்தில் வெயிலும், பகலில் மழையும், இரவில் இதமான காலநிலையும் என சீசன் களைகட்டியுள்ளது. ஊரடங்கால் தற்போது விவசாயப் பணிகள் ஏதும் நடைபெறாவிட்டாலும் தேயிலைப் பயிருக்கும், குடிநீா் ஆதாரங்களில் நீா்மட்டம் உயா்வதற்கும் மழை உறுதுணையாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் வருமாறு (அளவு மி.மீட்டரில்) - குன்னூா்- 32, உதகை- 29, கல்லட்டி - 25, பா்லியாறு- 23, மேல்குன்னூா், எமரால்டு- 15, குந்தா- 13, மேல்பவானி, அவலாஞ்சி- 12, கோத்தகிரி- 8, மசினகுடி- 7, பாலகொலா- 6, கேத்தி- 3, உலிக்கல், நடுவட்டம்- 2, கிளன்மாா்கன்- 1.3.