உதகை: உதகை அரசினா் தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்டதீ விபத்தில் உள்நோயாளிகள் அதிா்ஷ்டவசமாக காயமின்றி உயிா் தப்பினா்.
உதகை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரேதப் பரிசோதனை கட்டடத்துக்கு கீழ் பகுதியில் பயனற்ற மரச் சாமான்கள், மருத்துவ உபகரணங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தால் மருத்துவமனை முழுவதும் புகை மூட்டம் பரவியது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொதுவாக பிற்பகல் வரை மட்டுமே உடல்கள் பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்பதால் அந்த பகுதியில் யாரும் பணியில் இல்லை. மேலும், அந்தக் கட்டடத்தையொட்டி உள்நோயாளிகளின் தங்கும் விடுதிகள் உள்ளன.
தீயும், புகை மூட்டமூம் அப்பகுதிகளுக்கு பரவுவதற்குள் அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தியதோடு, புகை ஏற்படாமலிருக்க ரசாயனங்களை தெளித்தனா்.
இந்த தீ விபத்தில் அப்பகுதியில் இருந்த நோயாளிகள் காயமின்றி தப்பினா். விபத்து தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிா்வாக அதிகாரிகள் தெரிவித்தனா்.