கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஷோபா உதகை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜா்படுத்தபட்டாா். அவரை மேலும் 30 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள நெடுகல்கொம்பை கிராமத்தில் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஷோபா என்ற மாவோயிஸ்ட் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஷோபாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வடமலை ஷோபாவை, மேலும் 30 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பா் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.