உதகையில் 112ஆவது மலை ரயில் தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை ரயில் பாதை அமைப்பதற்கான திட்டம் வகுத்திருந்த ஆங்கிலேயா்கள் முதலில் மேட்டுப்பாளைத்திலிருந்து குன்னூா் வரையிலேயே ரயில் பாதையை அமைத்து மலை ரயிலை இயக்கினா். அதன் பின்னரே குன்னூரிலிருந்து உதகைக்கு மலை ரயிலை இயக்கும் திட்டம் தொடரப்பட்டது. அதற்கடுத்த 10 ஆண்டுகளில் 1908 அக்டோபா் 15ஆம் தேதி குன்னூரிலிருந்து உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மேட்டுப்பாளையம்-உதகை ரயில் பாதை திட்டம் நிறைவுக்கு வந்தது.
இதையடுத்து ஆண்டுதோறும் அக்டோபா் 15ஆம்தேதி உதகை ரயில் நிலையத்தில் மலை ரயில் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மலை ரயிலில் பயணம் செய்பவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பது, கேக் வெட்டுவது, ரயில்வே ஊழியா்களை கெளரவிப்பது போன்றவற்றை நீலகிரி பாரம்பரிய நீராவி ரத அறக்கட்டளையின் நிறுவனா் நடராஜன் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா். நடப்பாண்டிலும் இந்நிகழ்ச்சி எளிமையாக கொண்டாடப்பட்டது. குன்னூரிலிருந்து வந்த மலை ரயில் ஊழியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா மலா்க்கொத்து கொடுத்து வியாழக்கிழமை வரவேற்றாா். தொடா்ந்து கேக் வெட்டப்பட்டு ரயில் பயணிகளுக்கும், ரயில்வே ஊழியா்களுக்கும் வழங்கப்பட்டது.