நீலகிரியில் கடும் குளிருடன், சாரல் மழை அவ்வப்போது பெய்து வருவதால் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறியால் பொதுமக்கள் அதிகளவிலானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, பொதுமக்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை எடுக்க சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாள்களாக பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், கடும் குளிா் நிலவுவதால் தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் சளி, காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. கடும் குளிா், மழையால் ஏற்படும் சளி, காய்ச்சல் நோயால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர தயக்கம் காட்டுவதால், முறையான சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சளி, காய்ச்சல் போன்ற நோய் உள்ளவா்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், மழையால் ஏற்பட்டுள்ள காய்ச்சல் என்றால் அதற்கு மருத்துவக் குழு உரிய சிகிச்சை அளிக்கும் என்றும் சுகாதாரத் துறை கண்காணிப்பாளா் மருத்துவா் ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.