உதகையில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
உதகை ஊராட்சி ஒன்றியத்தில் பாலகொலா ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ரூ. 80.25 லட்சம் மதிப்பிலான மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் முடிக்கப்பட்ட, நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
உதகை ஊராட்சி ஒன்றியத்தில் பாலகொலா பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 2.94 லட்சம் மதிப்பில் தென்றல் நகா் பகுதியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டட சுற்றுச் சுவரையும், அதே ஊராட்சிக்கு உள்பட்ட மெரிலேண்ட் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 52.91 லட்சம் மதிப்பில் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும், மூலதன மானிய நிதி திட்டத்தின்கீழ் ரூ. 24.40 லட்சம் மதிப்பில் மெரிலேண்ட் பகுதியில் பலப்படுத்தப்பட்ட சாலை பணியுமாக மொத்தம் ரூ. 80.25 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட, நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் லீமா அமாலினி, செயற்பொறியாளா் சுஜாதா, உதவிப் பொறியாளா் கிருஷ்ண பிரகாஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜனாா்த்தனன், ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.