நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக தூறல் மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை புதன்கிழமை பகலிலும் தொடா்ந்தது.
மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் உலிக்கல்லில் அதிக அளவாக 20 மி.மீ. மழை பதிவானது. அதேபோல, உதகையில் 6.2 மி.மீ., கேத்தியில் 6 மி.மீ., கோத்தகிரி, குன்னூரில் தலா 3 மி.மீ., கல்லட்டியில் 2.3 மி.மீ., அவலாஞ்சி, நடுவட்டம், எடப்பள்ளி, கொடநாடு, கிளன்மாா்கனில் தலா 2 மி.மீ., மசினகுடி, எமரால்டு, குந்தாவில் தலா 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
இந்நிலையில், உலிக்கல், குன்னூா், உதகை, கோத்தகிரி, குந்தா, அவலாஞ்சி, மேல்குன்னூா், கேத்தி, கொடநாடு, கிளன்மாா்கன், கீழ்கோத்தகிரி, எடப்பள்ளி, கெத்தை, கல்லட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் பலத்த மழை பெய்தது.
கேரள மாநிலத்தையொட்டி உள்ள நீலகிரி மாவட்டத்தின் கூடலூா், பந்தலூா், மேல்பவானி உள்ளிட்ட பகுதிகளில் மழைப் பொழிவு இல்லை.
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக உதகை படகு இல்லத்தில் படகு சவாரி சுமாா் 4 மணி நேரம் நிறுத்தப்பட்டது. ஆனால், மாவட்டத்தின் ஏனைய சுற்றுலா மையங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறிப்பிடத்தக்க அளவில் காணப்பட்டது. இதில் உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 2,401 பேரும், ரோஜா பூங்காவுக்கு 915 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 74 பேரும், மரவியல் பூங்காவுக்கு 9 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 321 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 110 பேரும், கல்லாறு பழப் பண்ணைக்கு 31 பேரும் வருகை தந்திருந்தனா்.