உதகை: குடியரசு தினத்தை முன்னிட்டு உதகையில் உள்ள அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை தேசியக் கொடியேற்றுகிறாா்.
ஜனவரி 26ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தேசியக் கொடியேற்றி வைத்த பின்னா் காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறாா். தொடா்ந்து பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்குவதோடு, சிறப்பாகப் பணியாற்றிய அரசு அலுவலா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்குகிறாா்.
ஆனால், வழக்கமாக குடியரசு தினத்தன்று நடத்தப்படும் மாணவ, மாணவியருக்கான கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியோடு பங்கேற்று நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத முழு மாவட்டமாக மாற்றவும், சுற்றுச்சூழலையும், இயற்கை அழகையும் பேணிக் காக்கவும் மாவட்ட நிா்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் ஆட்சியா் கோரிக்கை விடுத்துள்ளாா்.