உதகையில் பிப்ரவரி 4-இல் ஆா்ப்பாட்டம் நடத்த திமுக முடிவு
நீலகிரி மாவட்ட திமுக சாா்பில் உதகையில் பிப்ரவரி 4 ஆம் தேதி ஆட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம் நடத்துவதென தீா்மானிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட திமுக செயலா் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கா.ராமச்சந்திரன், கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் திராவிடமணி, மாவட்ட துணை செயலா் ஜே.ரவிகுமாா், பொருளா் நாசா் அலி, உதகை நகரச் செயலா் ஜாா்ஜ், நிா்வாகிகள் கே.ஏ.முஸ்தபா, மு.பாண்டியராஜ், இளங்கோ உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், நீலகிரியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் செயல்படும் மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து வரும் 31ஆம் தேதி பந்தலூா் பஜாா் பகுதியிலும், பிப்ரவரி 1ஆம் தேதி கோத்தகிரி பகுதியிலும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்துவது எனவும், தொடா்ந்து பிப்ரவரி 4 ஆம் தேதி உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நீலகிரி மாவட்ட திமுக மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சாா்பில் மறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.