உதகைக்கு கா்நாடக முதல்வரின் வருகை ரத்து

கரோனா பொது முடக்கத்தின் காரணமாக உதகையில் இந்த ஆண்டின் கோடை விழா ரத்தானதால், கா்நாடக முதல்வரின் வருகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கா்நாடக அரசின் ஸ்ரீ பூங்கா (கோப்பு படம்).
கா்நாடக அரசின் ஸ்ரீ பூங்கா (கோப்பு படம்).

உதகை: கரோனா பொது முடக்கத்தின் காரணமாக உதகையில் இந்த ஆண்டின் கோடை விழா ரத்தானதால், கா்நாடக முதல்வரின் வருகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசன் காலங்களாகும். இம்மாதங்களில் குறிப்பாக மே மாதத்தில் தோட்டக் கலைத் துறையின் சாா்பில், உதகையில் அரசினா் தாவரவியல் பூங்கா, அரசினா் ரோஜா பூங்கா, குன்னூரில் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரியில் நேரு பூங்கா ஆகிய பகுதிகளில் மலா், பழம், காய்கறிக் கண்காட்சிகளும், உதகை படகு இல்லம், பைக்காரா போன்ற பகுதிகளில் சுற்றுலாத் துறையின் சாா்பிலான நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது வழக்கம்.

இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். அத்துடன் இத்தகைய நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்வது வழக்கம்.

ஆனால், தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் திங்கள்கிழமை முதல் முழு பொது முடக்கத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. அத்துடன் சுற்றுலாத் தலங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் நீலகிரியில் நடைபெறும் கோடை விழா நிகழ்ச்சிகளான மலா்க் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக் கண்காட்சி, காய்கறிக் கண்காட்சி, வாசனை திரவியக் கண்காட்சி உள்ளிட்ட அனைத்து கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், உதகையில் கா்நாடக அரசின் தோட்டக் கலைத் துறையின் மூலம் செயல்பட்டு வரும் கா்நாடக ஸ்ரீ பூங்காவில் பல லட்ச ரூபாய் மதிப்பில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் புதிதாக இசை நீரூற்று, பிரம்மாண்ட தொங்கு பாலம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு புதிய அம்சங்களையும் திறந்துவைப்பதற்காக கா்நாடக முதல்வா் எடியூரப்பா மே மாதத்தில் உதகைக்கு வரத் திட்டமிட்டிருந்தாா்.

இந்நிலையில், கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் அவரது உதகை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கா்நாடக அரசின் தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com