உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக மன நல வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவின் அருகில் தொடங்கிய இப்பேரணி, ஆட்சியா் அலுவலகம் வழியாகச் சென்று உதகை செவிலியா் பயிற்சிப் பள்ளியில் நிறைவடைந்தது. 100க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனா்.
பின்னா், மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:
உலக மன நல வாரமானது அக்டோபா் 10 முதல் அக்டோபா் 16ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சமமற்ற உலகில் மன ஆரோக்கியம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு மனநலம் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநலத் துறையின் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநலப் பிரிவில் இந்த ஆண்டில் மட்டும் சுமாா் 2,100 நபா்கள் வெளிநோயாளிகளாக சிசிச்சை பெற்றுள்ளனா். அதேபோல, 220 நபா்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனா். அதுமட்டுமல்லாமல் சுமாா் 100 போ் குடிப்பழக்கத்துக்காகவும், பிற போதை பழக்கத்துக்காகவும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனா்.
பொதுமக்கள் தங்களுக்கு மனநலம் தொடா்பாக சிகிச்சை, ஆலோசனைகள் தேவைப்படும்பட்சத்தில் உதகை அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வரும் மனநலத் துறையை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.
தொடா்ந்து, சிறந்த ஓவியம் வரைந்த மருத்துவா் சஜினிதேவிக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழை வழங்கிப் பாராட்டினாா்.
இதில், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோகரி ராமசந்திரன், மாவட்ட மன நல குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ராஜு, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை முதல்வா் ஜெயலலிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.