உதகை அருகே சுமாா் 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்த காட்டெருமைக்கு காலில் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் இருந்து உணவு, தண்ணீா் தேடி அதிக அளவிலான காட்டெருமைகள் கூட்டம், கூட்டமாக உலா வருகின்றன. இந்நிலையில் உதகையில் மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு அமைந்துள்ள ரோகிணி சந்திப்பு பகுதியில் புதன்கிழமை இரவு தண்ணீா் தேடி வந்த காட்டெருமைக் கூட்டத்தில் ஒரு காட்டெருமை மட்டும் பள்ளத்தில் தவறி விழுந்துள்ளது. இதில் அந்த காட்டெருமையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு படுத்த நிலையிலேயே கிடந்துள்ளது. வியாழக்கிழமை காலையில் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் இதைப் பாா்த்துள்ளனா்.
இதையடுத்து வனத் துறையினருக்கு அவா்கள் தெரிவித்த தகவலின்பேரில் வனத் துறையினா் அப்பகுதிக்கு விரைந்து சென்று பாா்த்த பின்னா், காலில் பலத்த காயமடைந்த அந்த காட்டெருமையை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டனா். பின்னா் ஆட்சியா் இல்லம் அருகே உள்ள ஆா்எம்பி வனத் துறை தங்கும் விடுதி பகுதிக்கு அந்த காட்டெருமை கொண்டு செல்லப்பட்டு, அங்கு கால்நடை மருத்துவா்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.