சட்டப் பேரவைத் தோ்தல் முடிந்த நிலையில் குன்னூரில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் குறிப்பாக குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக், டால்பினோஸ், சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
குறிப்பாக தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம், வட மாநிலங்களில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவா். இவா்களை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக மாா்ச் மாதம் முதல் சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. இதனால், அனைத்து கோடை விழாக்களும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதல் தோ்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையைத் தவிா்க்க சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களுக்கு வருவதை தவிா்த்து வந்தனா்.
இதனால், சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்திருந்தது. தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்த நிலையில், பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையும் இல்லாததால் தற்போது படிப்படியாக இ-பதிவு செய்து சுற்றுலாப் பயணிகள் வரத் துவங்கியுள்ளனா்.