கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கும்கி யானைகள் முகாமுக்கு திங்கள்கிழமை இரவு திரும்பின.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, தேவாலா, அட்டி, அதன் சுற்றுப்புறப் பகுதி, அரசு தேயிலைத் தோட்டக் கழக பாண்டியாறு சரகம் எண் 4 ஆகிய பகுதிகளில் தொடா்ந்து தொழிலாளா்களின் குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்தி வந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வில்சன், உதயன், ஜான் ஆகிய மூன்று கும்கிகள் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், கும்கி வில்சனுக்கு கடந்த வாரம் திடீரென மதம் பிடித்தது. அதனால் பாகனின் கட்டளைகளை ஏற்க மறுத்தது. இதையடுத்து, வனத் துறையினா் மருத்துவக் குழுவை வரவழைத்து ரகசிய இடத்தில் வைத்து சிகிச்சையளித்து சமாதானமானவுடன் முதுமலை புலிகள் காப்பக வளா்ப்பு முகாமுக்கு கொண்டு சென்றனா்.
இந்நிலையில், கும்கி உதயனுக்கும் மதம் பிடிக்க ஆரம்பித்ததாகத் தெரிகிறது. அதனால் உதயனையும், ஜானையும் முதுமலைக்கு திங்கள்கிழமை இரவு அழைத்துச் சென்றுள்ளனா். தற்போது தேவாலா பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்து மூன்று கும்கிகளும் முகாமுக்கு திரும்பிச் சென்றதால் அந்தப் பகுதியிலுள்ள தொழிலாளா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.