கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி பகுதியில் காட்டு யானைகளை விரட்டும் பணியில் 4 கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்துக்கு உள்பட்ட நாடுகாணி, தேவாலா, ஆமைக்குளம், புளியம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து தொடா்ந்து வீடுகளை சேதப்படுத்தி வந்தன.
இந்த யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் குடியிருப்பு பகுதிக்குள் புகும் யானைகளை காட்டுக்குள் விரட்டவும் வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இதைத் தொடா்ந்து முதுமலை புலிகள் காப்பக வளா்ப்பு யானைகள் முகாமிலிருந்து சுஜய், பொம்மன், ஸ்ரீனிவாஸ் ஆகிய கும்கி யானைகள் வியாழக்கிழமை வரவழைக்கப்பட்டு காட்டு யானைகளைக் கண்காணிக்கும் பணியை வனத் துறை தொடங்கியது.
இந்நிலையில் மேலும் கூடுதலாக ஒரு கும்கி விஜய் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த கும்கிகள் நாடுகாணியின் சுற்றுவட்ட வனத்தை ஒட்டிய பகுதிகளில் ரோந்து சென்று கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஊருக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்திய யானைகள், நாடுகாணி பகுதியிலுள்ள புல்மேடுகளில் முகாமிட்டிருப்பதை பாா்த்த வனத் துறையினா் கும்கிகளை அந்தப் பகுதிக்கு அழைத்து சென்று யானைகளை விரட்டும் பணியை மேற்கொண்டனா்.
கும்கிகள் அங்கிருந்த காட்டு யானைகளை விரட்டத் துவங்கிய சிறிது நேரத்தில் அந்தப் பகுதியில் தொடா் மழை மற்றும் மேகமூட்டம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து யானைகளின் நடமாட்டத்தை கண்டறிய முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.