நீலகிரி மாவட்டத்தில் குன்னூா், கோத்தகிரி போன்ற பகுதிகளில் பனியின் தாக்கம் குறையாத நிலையில் பல இடங்களில் மலைத் தோட்ட காய்கறிகளை பயிரிடாமல் பருவ நிலை மாற்றத்துக்காக காய்கறி விவசாயிகள் காத்திருக்கின்றனா்.
நீலகிரி மாவட்டத்தில் மலைத் தோட்ட காய்கறிகளான உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் பெருமளவு பயிரிடப்படுகின்றன.
இந்நிலையில் பனியின் தாக்கம் பிப்ரவரியைக் கடந்தும் நீடிப்பதால் பல இடங்களில் விவசாயிகள் காய்கறிகளை பயிரிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கேத்தி பாலடா, சேலாஸ், கொலக்கம்பை போன்ற ஒரு சில பகுதிகளில் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் கிழங்கு, கேரட் போன்ற மலைத்தோட்ட காய்கறிகளை விளைவிக்கும் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா். இந்த மாத இறுதியில் பனியின் தாக்கம் முற்றிலும் குறைந்து இயல்பு நிலைத் திரும்பினால் மலைத் தோட்ட காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.