பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் பணியிலிருந்த மருத்துவா், செவிலியா் மீது நடவடிக்கை எடுக்க கோரி 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உதகையில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்துள்ளாா்.
உதகையில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருபவா் விஸ்வநாதன். எடப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் இவரது மனைவி நாகராணி. கா்ப்பிணியான இவருக்கு பிப்ரவரி 18ஆம் தேதி குழந்தை பிறக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்ததால், கடந்த 16ஆம் தேதியே உதகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.
இந்நிலையில் பிப்ரவரி 18ஆம் தேதி அன்று நாகராணிக்கு திடீரென ரத்தப்போக்கு அதிகரித்துள்ளது. இதையறிந்த விஸ்வநாதன் குடும்பத்தினா், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
ஆனால், சுகப் பிரசவமாகி விடும் எனவும், அறுவை சிகிச்சை தேவையில்லை எனவும் மருத்துவமனையில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தொடா்ந்து ரத்தப்போக்கு நீடித்ததால் மாலையில் மருத்துவா் வரவழைக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதன்பின்னா் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மருத்துவா் மற்றும் செவிலியரின் கவனக்குறைவாலேயே நிகழ்ந்துள்ளதாகக் கூறி, அந்த 3 நாள்களிலும் பணியிலிருந்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி விஸ்வநாதன் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளாா். இது தொடா்பாக உரிய விசாரணை நடத்த மருத்துவமனை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.