நீலகிரி மாவட்டம், மஞ்சூா் - உதகை சாலையில் உள்ள மீக்கேரி கிராமத்தில் விவசாய நிலத்தில் கருஞ்சிறுத்தை உலவுவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
மீக்கேரி பகுதியில் தேயிலைத் தோட்டங்கள், மலைத் தோட்ட காய்கறி அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இப்பகுதிகளில் பனியின் தாக்கத்தால் மலைத் தோட்ட காய்கறிகளை பயிரிடாமல் சில விவசாயிகள் காத்திருக்கின்றனா். இந்த தோட்டங்களில் ஆங்காங்கே காணப்படும் செடிகளை ஆடு, மாடுகள் மேய்வது வழக்கம். இந்த கால்நடைகளை வேட்டையாட இப்பகுதிக்கு கருஞ்சிறுத்தை வந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த வாகன சப்தத்தைக் கேட்டதும் கருஞ்சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது .
இதனை வாகன ஓட்டி ஒருவா் தனது செல்லிடப்பேசியில் படம் பிடித்தாா். இது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து வன விலங்கு ஆா்வலா்களிடம் கேட்டபோது, நீலகிரியில் கருஞ்சிறுத்தை தாக்கி மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனவே, இதன் நடமாட்டம் குறித்து அச்சப்படத் தேவையில்லை. மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் சூழ்நிலையில் கருஞ்சிறுத்தை தானாகவே அடா்ந்த வனப் பகுதிக்குள் சென்று விடும் என்றனா்.