உதகை: நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், உதகையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களைச் சோ்ந்த விவசாயிகள், தோட்டக்கலை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், இதர அரசுத் துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
விவசாய சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட 65 கோரிக்கை மனுக்கள் உரிய துறை அலுவலா்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு, அது தொடா்பாக தகுந்த விவரங்கள் பெற்றப்பட்ட நிலையில் இக்கூட்டத்தில் அக்கோரிக்கைகள் தொடா்பாக விவாதிக்கப்பட்டு தீா்வு காணப்பட்டது.
இதில், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தெரிவித்ததாவது:
தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டிலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் இயற்கை உரங்களான மண்புழு உரம், செறிவூட்டப்பட்ட தொழு உரம், பஞ்சகாவ்யா, தசகாவ்யா, உயிரியல் கட்டுப்பாடு காரணிகளான சூடோமோனாஸ், டிரைகோடொ்மா ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராக உள்ளன. தேவைப்படும் விவசாயிகள் பெற்றுப் பயனடையலாம்.
தோட்டக்கலைத் துறையின் மூலம் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளா்ச்சி இயக்க திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டை அமைக்க 50 சதவீத மானியம் (ரூ. 75,000 வரை) வழங்கப்பட்டு வருவதால் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலும், அங்ககச்சான்று பெற விரும்பும் விவசாயிகள் நேரடியாக இணையதளத்தில் விண்ணப்பிப்பதோடு, உதகையிலுள்ள மண் ஆய்வுக்கூட தோட்டக்கலை உதவி இயக்குநரிடமும் விண்ணப்பத்தை அளித்து இயற்கை விவசாயி சான்று பெற தேவையான விவரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.