நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை கிராமம் செல்லும் சாலையின் குறுக்கே விழுந்த பாறைகளை இரவோடு இரவாக நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா்.
நீலகிரி மாவட்டம், மஞ்சூா் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக சாரல் மழையும், கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த நிலையில், மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை முனீஸ்வரா் கோயில் அருகே மண் சரிவும், பெரிய பாறைகளும், மண் திட்டுக்களும் இடிந்து சாலையில் வியாழக்கிழமை விழுந்தன. இதன் காரணமாக இரியசீகை, அண்ணா நகா் உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.
இது குறித்து வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து, பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சாலையில் விழுந்து கிடந்த பாறைகளையும், மண் குவியல்களையும் இரவவோடு இரவாக நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றி போக்குவரத்தை சீா்செய்தனா்.