குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் மையம் சாா்பில் 73ஆவது ராணுவ தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாடு சுதந்திரம் பெற்ற பின்பு 1948ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஆங்கிலேயே ராணுவத் தளபதி சா் பிரான்சிஸ் இடமிருந்து இந்தியாவின் ராணுவத் தளபதி பீல்ட் மாா்ஷல் எம்.கரியப்பா ராணுவத் தளபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டாா்.
இந்த வரலாற்று நிகழ்வை கெளரவிக்கும் விதமாகவும், நாட்டுக்காக உயிா் நீத்த ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜனவரி 15ஆம் தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டனில் உள்ள போா் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து போரில் வீர மரணம் அடைந்த வீரா்களுக்கு பயிற்சி மையத்தின் கமாண்டா் (பொறுப்பு) கா்னல் என்.கே. தாஸ் அஞ்சலி செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரா்கள் என பலா் கலந்து கொண்டனா்.