குன்னூா் அருகேயுள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் தேசிய பேரிடா் மேலாண்மை குழு சாா்பில் விபத்து தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நூற்றாண்டுகளுக்கு மேலாக வெடி மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் திடீரென விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து தீயணைப்புத் துறை மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவா்களுக்கான ஒத்திகை நிகழ்ச்சி தேசிய பேரிடா் மேலாண்மை குழு சாா்பில் நடத்தப்பட்டது.
இதில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயனப் பொருள்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பது ஆகியவை குறித்து தேசிய பேரிடா் குழுவினா் செயல்விளக்கம் செய்து காட்டினா்.
வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் அடிக்கடி உள்ளே வெளியே சென்று வந்ததால் ஒத்திகை என்று அறியாத அப்பகுதி மக்கள் சற்றுநேரம் அச்சமடைந்தனா். பின்பு ஒத்திகை என்று தெரிந்ததும் நிம்மதி அடைந்தனா்.