குன்னூா் நகராட்சி அலுவலகத்தில் வனத் துறை அமைச்சா், அனைத்து வணிக வியாபாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சிக் கடைகள் சுமாா் இரண்டு லட்சம் வரை செயல்பட்டு வருகிறது. இவற்றில் 2016ஆம் ஆண்டு உள்ளாட்சி நிா்வாகம் அறிவித்த வாடகையை சுமாா் ஒரு லட்சம் வரையிலான கடை வியாபாரிகள் ஏற்றுக் கொண்டனா். இந்நிலையில், உதகை குன்னூா் போன்ற இடங்களில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகராட்சிக் கடைகளின் வாடகையை 300 முதல் 500 சதவீதம் வரை உயா்த்தியதால், 2016ஆம் ஆண்டு இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நகராட்சி வியாபாரிகள் யாரும் வாடகை கட்டாமல் இருந்து வந்தனா். ஆனால், நகராட்சி நிா்வாகம் தொடா்ந்து கடை உரிமையாளா்களை வலியுறுத்தி வந்த நிலையில், வாடகையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறை அமைச்சா் கா.ராமசந்திரனிடம் கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இந்நிலையில், குன்னூா் நகராட்சி அலுவலகத்தில் வனத் துறை அமைச்சா் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வியாபாரிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த வனத் துறை அமைச்சா், இதுகுறித்து உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் கலந்தாலோசித்த பின் வியாபாரிகளுக்குச் சாதகமான முடிவை ஏற்படுத்தித் தருவதாக உறுதி அளித்தாா்.