கோத்தகிரி வாா்விக், சுள்ளிக்கூடு, அளக்கரை கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகளில் அதிக அளவில் கரடிகளின் நடமாட்டம் காணப்படுவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூா், குந்தா போன்ற பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. கடந்த காலங்களில் இரவு நேரங்களில் மட்டும் அருகில் உள்ள வனப் பகுதியில் இருந்து உணவு தேடி கிராமத்துக்குள் கரடிகள் வருவது வாடிக்கையாக இருந்தது.
தற்போது கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனால், இரவில் வரும் கரடிகள் பகல் நேரங்களிலேயே வரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், கோத்தகிரி கைகாட்டி அருகே வாா்விக், சுள்ளிக்கூடு பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் சனிக்கிழமை காலையில் இரண்டு கரடிகள் உணவு தேடி வந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு கரடிகளை விரட்டினா். கரடிகள் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்குள் சென்றுவிட்டன.
அசம்பாவிதம் ஏற்படும் முன்னரே வனத் துறையினா் கூண்டுவைத்து கரடிகளைப் பிடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.