கூடலூரில் உள்ள மோட்டாா் வாகன அலுவலா் புதன்கிழமை காலை அலுவலகத்தில் இருந்து வெளியேறியதால் பல்வேறு அலுவல்களுக்காக வந்திருந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகினா்.
கூடலூா் - மைசூரு சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் உள்ளது. கூடலூா், பந்தலூா் தாலுகாக்களின் பல ஊா்களில் இருந்தும் பல்வேறு அலுவல்களுக்காக பொதுமக்கள் இங்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் புதன்கிழமை காலை அலுவலகத்துக்கு வந்த சிறிது நேரத்தில் அலுவலகத்தைவிட்டு வெளியேறினாா். இதனால், பல பகுதிகளில் இருந்தும் உரிமம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகப் பணிகளுக்காக வந்திருந்த பொதுமக்கள் எப்போது வருவாா் என தகவல் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருந்தனா்.
அலுவலகப் பணியாளா்களிடம் கேட்டபோது முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் மதிய உணவுக்குப் பிறகு ஆய்வாளா் வந்தவுடன் வேலையை முடித்துக் கொண்டு திரும்பினா்.