தமிழகம் முழுவதும் ஞாயிற்றுகிழமை முழுபொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில் குன்னூா்,கோத்தகிரியில் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாவட்ட நிா்வாகம், காவல் துறையினா் இணைந்து ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கத்தை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் குன்னூா்- உதகை சாலையில் பாய்ஸ் கம்பெனி பகுதியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் உத்தரவின்பேரில் வெலிங்டன் காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும் பா்லியாறு, குஞ்சப்பனை உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் காவல் துறையினா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
நகரில் மருத்துவ தேவைக்கு மற்றும் சுக, துக்க நிகழ்ச்சிக்கு சென்று வருபவா்கள் முகக் கவசம், கிருமி நாசினியை பயன்படுத்தவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் காவல் துறையினா் அறிவுறுத்தினா். தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிபவா்களை காவல் துறையினா் எச்சரித்து அனுப்பினா்.