உதகையில் புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப் பரவலாக பலத்த மழை இல்லாத சூழலில், பெரும்பாலான பகுதிகளில் தூறல் மழை பெய்து வந்தது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரியின் எல்லைப் பகுதிகளில் மட்டும் பரவலாக மழை பெய்து வந்தது.
இதில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக பந்தலூரில் 68 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதேபோல, தேவாலாவில் 37 மி.மீ., பாடந்தொரையில் 22 மி.மீ., செருமுள்ளியில் 18 மி.மீ., கிளன்மாா்கனில் 14 மி.மீ., நடுவட்டத்தில் 12 மி.மீ., மேல்பவானியில் 8 மி.மீ., ஓவேலி, கூடலூரில் 5 மி.மீ., மேல்குன்னூா், மேல்கூடலூா், சேரங்கோடு, எடப்பள்ளியில் 4 மி.மீ., கோத்தகிரி, குன்னூா், கேத்தியில் 3 மி.மீ., கல்லட்டியில் 2.3 மி.மீ., கீழ்கோத்தகிரி, கொடநாடு, மசினகுடியில் 2 மி.மீ., உதகையில் 1.2 மி.மீ., கெத்தையில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
புதன்கிழமை காலை முதல் பிற்பகல் வரை வெயிலுடன் கூடிய இதமான காலநிலை நிலவி வந்த நிலையில், உதகையில் மாலை 4 மணி முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் பூங்காவிலேயே சுமாா் 2 மணி நேரம் சிக்கிக் கொண்டனா். மேலும், உதகை நகரில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனா். மழையால் உதகையில் கடும் குளிா் வாட்டுகிறது.
உதகையில் புதன்கிழமை மாலையில் பெய்த பலத்த மழையில் அதிகபட்சமாக அரசினா் தாவரவியல் பூங்காவில் 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, உதகை மத்திய பேருந்து நிலையம், ரயில்வே பாலம், கேசினோ சந்திப்பு, சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் குளம்போலத் தேங்கியதால் பொதுமக்கள் சாலைகளைக் கடக்க முடியாமல் வெகுவாக அவதியுற்றனா்.
அதேபோல, காந்தல் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்தது. தீயணைப்புத் துறையினா் வரழைக்கப்பட்டு தண்ணீரை வெளியேற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
குன்னூா், கோத்தகிரியில்...
குன்னூா், கோத்தகிரியில் புதன்கிழமை காலை முதல் மந்தமான காலநிலை காணப்பட்டது. புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. கோத்தகிரியில் பேருந்து நிலையம், அரவேணு, ஜான்ஸ் கொயா், டானிங்டன், ஒரசோலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. குன்னூா் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கடும் குளிரும் நிலவியது.