உதகை அருகே நஞ்சநாடு பகுதியிலுள்ள எல்லகண்டி கிராமத்தில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளி, காட்டெருமை தாக்கியதில் உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே நஞ்சநாடு எல்லகண்டி கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதிகளை ஒட்டியுள்ள வனத்தில் சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் அங்குள்ள ஒரு தனியாா் தேயிலை எஸ்டேட்டில் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை காலை வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த காட்டெருமை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஜெயலட்சுமி என்பவரைத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து உதகை ஊரக காவல் துறையினா், வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.