உதகை அருகே சிறுமியைத் தாக்கிக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா்.
உதகை வடக்கு வனச் சரகத்துக்குள்பட்ட அரக்காடு பகுதியில் பாலன் என்பவருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் வடமாநில தொழிலாளா்கள் பலா் குடும்பத்துடன் தங்கி, பணிபுரிந்து வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி, அசாம் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி நிஷாந்த் என்பவரது மகள் சரிதா (4) தேயிலைத் தோட்டத்தில் இருந்தபோது, அங்கு மறைந்திருந்த சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்தாா். படுகாயமடைந்த சரிதா உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தி வந்தனா். இதையடுத்து மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம் உத்தரவின் பேரில் அரக்காடு பகுதியில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, சிறுத்தை நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வந்தனா்.
இதில் சில இடங்களில் சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவானதையடுத்து சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைக்க வனத் துறையினா் முடிவு செய்தனா். இதன்படி வெள்ளிக்கிழமை சிறுத்தையின் நடமாட்டம் உள்ள பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.