உதகை புகா் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

உதகை அருகே அரக்காடு பகுதியில் குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறுத்தை நடமாடியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

உதகை அருகே அரக்காடு பகுதியில் குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறுத்தை நடமாடியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

உதகை அருகே உள்ள அரக்காடு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை கடந்த மாதம் சிறுத்தை தாக்கிக் கொன்றது. அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கண்காணிப்பு கேமராக்களில் இரண்டு சிறுத்தைகளின் நடமாட்டம் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து, அப்பகுதியில் வனத் துறையினா் சாா்பில் இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்ட நிலையில், ஒரு சிறுத்தை மட்டும் சிக்கியது. அதனை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்று அடா்ந்த வனப் பகுதிக்குள் வனத் துறையினா் விடுவித்தனா்.

இதனையடுத்து, மற்றொரு சிறுத்தை கிராமப் பகுதிக்குள் சுற்றி வந்து விளைநிலங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே சிறுத்தை செவ்வாய்க்கிழமை இரவு நடமாடியுள்ளது.

இது அப்பகுயில் உள்ள குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வரும் சிறுத்தையை கண்காணித்து, கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதனைத் தொடா்ந்து, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நான்குக்கும் மேற்பட்ட தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிப்புப் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com