நீலகிரியில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தமிழக தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தலின்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரை அனைத்து அரசு சுகாதார வசதிகளிலும் இத்திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடா்பாக சுகாதாரத் துறையினா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மருத்துவமனைகளில் ஏற்படும் தொற்று நோயைத் தடுக்கவும், நோயாளிகள் மருத்துவமனைகளில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்கி சிகிச்சை பெறும்போது மன நிம்மதியுடன் இருத்தல், மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் தோற்றத்தை அழகுபடுத்துதல் என்ற அடிப்படையிலான இத்திட்டம் நீலகிரி மாவட்டம் முழுவதுமுள்ள 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 தாலுகா மற்றும் துணை தாலுகா மருத்துவமனைகள் ஆகியவற்றுடன் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் செயல்படுத்தப்படுகிறது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் கட்டடங்கள் மற்றும் வெளிப்புற பகுதிகள் உள்பட முழு மருத்துவமனை வளாகத்தையும் தூய்மையாக பராமரித்தல், கழிப்பறைகளை சுத்தம் செய்தல், பூச்சி மற்றும் கரையான்களை அகற்றுதல், அனைத்து குப்பை மற்றும் சேதம் அடைந்த பொருள்களை மருத்துவமனையிலிருந்து அகற்றுதல், தூய்மை நடவடிக்கைகள் குறித்து அனைத்து செவிலியருக்கும் பயிற்சி அளித்தல் உள்ளிட்டவையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.