கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் வேட்டை கும்பல் பயன்படுத்திய கள்ளத் துப்பாக்கியை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
கூடலூா் வனக்கோட்டம், ஓவேலி வனச் சரகத்தில் வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சியை கூடலூா் மற்றும் கேரளத்தில் விற்பனை செய்வது தொடா்ந்து நடைபெற்று வருவதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்தது. ஓவேலி வனச் சரகத்தில் தனியாா் வசமுள்ள பகுதியில் காட்டெருமையை வேட்டையாடி எலும்புகளை புதைத்து வைத்திருந்ததை முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள மோப்ப நாய் மூலம்
வனத் துறையினா் கண்டுபிடித்தனா். இதைத் தொடா்ந்து உதவி வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாசன் தலைமையில் தனிப் படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மீண்டும் வன விலங்குகள் வேட்டை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து மோப்ப நாயுடன் வருவாய்த் துறை, வனத் துறை மற்றும் காவல் துறை அடங்கிய தனிப் படை பெரியசோலை பகுதியிலுள்ள சஞ்சய் நகரில் ஒரு வீட்டை முற்றுகையிட்டனா். அந்த வீடு பூட்டியிருந்தது. மோப்ப நாய் அந்த வீட்டை அடையாளம் காட்டியதால் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தியதில் வேட்டையாடப்பட்ட வன விலங்கின் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, முகப்பு விளக்கு உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனா். வீட்டின் உரிமையாளா் குறித்த தகவலை சேகரித்து வருகின்றனா்.தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது.