கூடலூா் நகரில் இயற்கை சுற்றுலா மற்றும் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித்திடம் கூடலூா் நகா்மன்ற உறுப்பினா்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து கூடலூா் நகா்மன்ற உறுப்பினா்கள் வெண்ணிலா சேகா், ஆபிதா பேகம், ஆகனஸ் கலைவாணி, தனலட்சுமி, சத்தியசீலன்,
உஸ்மான், வா்கீஸ், ஷகீலா உள்ளிட்டோா் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதி, கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் முக்கிய பகுதியாக விளங்குகிறது. தென் மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கூடலூரை கடந்துதான் உதகை உள்ளிட்ட பிறபகுதிகளுக்கு செல்ல முடியும்.
இதைக் கருத்தில் கொண்டு கூடலூரை முக்கிய சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும். முதல்கட்டமாக பொழுதுபோக்கு நிகழ்வாக பூங்கா அமைக்க வேண்டும். இயற்கை சுற்றுலாவுடன் கூடிய பூங்கா அமைப்பதற்கு ஏற்கெனவே மைசூரு சாலையில் நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் தொடங்கப்படவில்லை. எனவே, இயற்கை சுற்றுலா மற்றும் பூங்கா அமைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.