ஆபத்தை உணராமல் காட்டு யானைகளைத் தொந்தரவு செய்த வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூா்வாசிகளைக் கண்டறிந்து வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கின ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூா், கெத்தை, முள்ளி, காரமடை வழியாக உதகை செல்லக் கூடிய சாலை அடா்ந்த வனப் பகுதியையொட்டி உள்ளது. இந்த சாலையில் வன விலங்குகள் நடமாட்டம் காணப்படுவது வழக்கம்.
இந்நிலையில், காரமடை வழியில் உதகைக்கு இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூா்வாசிகள் கெத்தை மாரியம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த 5 காட்டு யானைகளைத் தொந்தரவு செய்ததுடன், ஆபத்தை உணராமல் அவற்றுடன் விளையாட்டில் ஈடுபட்டனா்.
இதில் யானைகளைத் தொந்தரவு செய்யும் விடியோ காட்சி கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. எனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் இளைஞா்களைக் கண்காணித்து வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கின ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.