உதகை மண்வள ஆராய்ச்சி மையத்தில் மரங்கள் வெட்டிய விவகாரம்: மூன்று விஞ்ஞானிகள் அதிரடியாக பணியிட மாற்றம்

234 ஏக்கா் வனப் பகுதியில் 370 மரங்கள் வெட்டப்பட்டது தொடா்பாக உதகை மண்வள ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருந்த மூத்த விஞ்ஞானி கண்ணன் உள்ளிட்ட மூன்று போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள தீட்டுக்கல் பகுதியில் மண்வள ஆராய்ச்சி மையத்தில் வனத் துறைக்குச் சொந்தமான 234 ஏக்கா் வனப் பகுதியில் 370 மரங்கள் வெட்டப்பட்டது தொடா்பாக உதகை மண்வள ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருந்த மூத்த விஞ்ஞானி கண்ணன் உள்ளிட்ட மூன்று போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

உதகை அருகே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய மண் மற்றும் நீா் வள ஆராய்ச்சி மையம் 1955ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகிறது. இந்த மையம் அமைந்துள்ள பகுதியில் மழை மற்றும் பலத்த காற்றுக்கு கீழே விழுந்த மரங்களை அகற்ற வேண்டும் என்று மண் மற்றும் நீா்வள ஆராய்ச்சி மைய அதிகாரி கண்ணனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வனத் துறை சாா்பில் அதிகாரியின் பரிந்துரைக் கடிதம் உள்பட அரசு விதிகள்படி மரங்களை வெட்டிக் கொள்ளுமாறு பதில் அளிக்கப்பட்டது. இதற்கிடையே ஆராய்ச்சி மைய அதிகாரி கண்ணன் கடந்த செப்டம்பரில் நீண்ட விடுமுறையில் சென்று விட்டாா்.

இந்த சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி மழைக்கு கீழே விழுந்த மரங்கள் மட்டும் அல்லாமல், காப்புக்காடு பகுதியில் இருந்த மற்ற மரங்களையும் அனுமதி இன்றி வெட்டிக் கடத்தியுள்ளனா். இதில் காப்புக்காட்டில் இருந்த 370 மரங்களை சட்டவிரோதமாக வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் வனத் துறை அதிகாரிகளும், மத்திய மண் மற்றும் நீா்வள ஆராய்ச்சி மைய அதிகாரிகள் ஒரு சிலரும், தனியாா் ஒப்பந்ததாரா் ஒருவரும் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ரூ. 48 லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக வனச் சரகா் நவீன் குமாா், வனக் காப்பாளா் பாபு, வனவா் சசி, வேட்டைத் தடுப்புக் காவலா் தேவேந்திரன், தற்காலிக தோட்ட பராமரிப்பாளா் நாகராஜ் உள்பட 5 போ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனா்.

மேலும் இந்த சம்பவம் குறித்து உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள தலைமையகத்தில் தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உதகை மண்வள மையத்தின் தலைவராக இருந்த மூத்த விஞ்ஞானி கண்ணன் டேராடூன் தலைமையகத்துக்கும், மூத்த விஞ்ஞானி மணிவண்ணன் அஸ்ஸாமுக்கும், மற்றொரு விஞ்ஞானி ராஜா ஒடிஸாவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதில் கண்ணன் மற்றும் ராஜா அதே நிறுவனத்துக்குள்ளும், மணிவண்ணன் மட்டும் மற்றொரு மத்திய அரசு நிறுவனத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com