உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு
கோடை சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் உதகை நகரில் புதன்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோடைக் காலம் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டிவரும் நிலையில், பொதுமக்கள் குறைந்த வெப்பம் நிலவும் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வரத் தொடங்கியுள்ளனா்.
குறிப்பாக உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள் அங்கு பூத்து குலுங்கும் மலா்களையும், இயற்கை காட்சிகளையும் கண்டு ரசித்து செல்கின்றனா்.
மேலும், இங்குள்ள ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் வருகையால் உதகை நகரில் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காவல் துறையினா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.