உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு
உதகை: உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மே 7-ஆம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு, பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், உதகைக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா்.
இந்நிலையில், மே மாதத்தில் நடைபெறும் கோடை விழாவின்போது மட்டும் சுமாா் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து செல்கின்றனா்.
உதகையில் முறையான சாலைகளோ, மேல்பாலங்களோ இல்லாத நிலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் பல மணி நேரம் வாகனங்களில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
முறையான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நீலகிரியில் லட்சகணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது சுற்றுலாப் பயணிகளுக்கும், உள்ளூா் மக்களுக்கும் மிகுந்த சிரமத்தை அளித்து வந்தது.
இந்நிலையில், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு செல்வோருக்கு மே 7-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இ -பாஸ் முறையை அமல்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் எத்தனை சுற்றுலா வாகனங்கள் நீலகிரிக்குள் வருகின்றன, எத்தனைப் போ் வருகிறாா்கள், தங்குகிறாா்கள் என்பது தெரியவரும்.
இதன் மூலம் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதோடு, தங்கும் விடுதிகளின் கூடுதல் கட்டணம், தண்ணீா்ப் பிரச்னை இவை எல்லாம் கட்டுக்குள் வரும் என்பதால் உயா்நீதிமன்றத்தின்
இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.