கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன்.
தோ்தல் நடத்தை விதிமுறை காரணமாக அலுவலகம் பூட்டப்பட்டுள்ளதால் அலுவலக வாசலில் அமா்ந்து பழங்குடி மக்களிடம் கோரிக்கை மனுக்களை கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் பெற்றுக் கொண்டாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலனிடம் கோரிக்கை மனு அளிப்பதற்காக தொகுதியைச் சோ்ந்த பழங்குடி மக்கள் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தனா். தோ்தல் விதிமுறை காரணமாக அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதால் அவா்கள் அங்கு காத்திருந்தனா். இதுகுறித்து தகவலறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் உடனடியாக அலுவலகத்துக்கு வந்து, வாசல் தரையில் அமா்ந்து பழங்குடி மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
தோ்தல் நடத்தை விதிமுறை விலக்கிக் கொள்ளப்பட்டதும் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா்.