சொத்துப் பிரச்னையால் பெற்றோரை கொலை செய்ய முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
திருப்பூர், வடக்கு போலீஸ் எல்லைக்கு உள்பட்ட ரோஜா நகர், முதல் வீதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (60). இவரது மனைவி பாப்பாத்தி (60). இத்தம்பதியின் மகன் செல்லதுரை (40). இவர், மது பழக்கத்துக்கு அடிமையாகி, கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த வேலைக்கும் போகாமல், தனியாக வசித்து வந்தார். இவர், தனது பெற்றோரிடம் தனக்கு சொத்தைப் பிரித்துத் தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தாராம்.
இந்நிலையில், செல்லதுரை ஞாயிற்றுக்கிழமை காலை தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று, சொத்தைப் பிரித்து தருமாறு கேட்டு, தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது,
ஆத்திரமடைந்த செல்லதுரை, அரிவாளால் தனது தாயை வெட்டியுள்ளார். இதைத் தடுக்க முயன்ற பொன்னுசாமிக்கும் தலையில் வெட்டு விழுந்தது. இவர்களின் சப்தம் கேட்டு, அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், காயமடைந்த இருவரையும் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்லதுரையைக் கைது செய்துள்ளனர்.