திருப்பூரில் அஸ்ஸாம் மாநில இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, காவல் துறையினர் கூறியதாவது:
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் (24). இவர், திருப்பூரில் தங்கி, பல்லடம் சாலை, தட்டான் தோட்டத்தில் உள்ள காம்பேக்டிங் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.
அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த பாலாஜி (எ) ராமகிருஷ்ணன் (49) அந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், மனோஜ், அவரது நண்பர் ராபின் குருஷ் (28) ஆகிய இருவரும் நிறுவனத்தில் உள்ள தொட்டியில் இருந்து மோட்டார் மூலமாக ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் எடுக்க முயன்றுள்ளனர். அப்போது, ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மனோஜ் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே மனோஜ் உயிரிழந்தார்.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர், ராமகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.