திருப்பூரில் சிற்றுந்தின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர், கஞ்சம்பாளையத்தில் இருந்து வீரபாண்டி நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு சிற்றுந்து சென்று கொண்டிருந்தது. அதை உடுமலை, பாப்பான்குளத்தைச் சேர்ந்த அன்பரசு (23) ஓட்டிச் சென்றார்.
ஊத்துக்குளி சாலை, இரண்டாவது ரயில்வே கேட் அருகே சிற்றுந்தை நிறுத்தி பயணிகள் ஏற்றிக் கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, அங்கு வந்த ஒருவர் திடீரென்று சிற்றுந்தின் பின்பக்கக் கண்ணாடி மீது கல்வீசித் தாக்கியுள்ளார். இதில், பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சப்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வருவதற்குள் அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து, அன்பரசு அளித்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.