தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்களை வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
சங்கரண்டாம்பாளையம் அமராவதி ஆற்றுப் படுகை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு தலைமையில் வட்டாட்சியர் வேங்கடலட்சுமி உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் தீவிரத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே மணல் கடத்தி வந்ததாக ஆட்டோவினை பறிமுதல் செய்தனர்.
இதே போல் மூலனூர் பகுதியில் நடைபெற்ற சோதனையில் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட டிராக்டர் வருவாய்த் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாக வட்டாட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.