உடுமலை வட்டத்தில் பீட்ரூட் விளைச்சல் அதிகரித்துள்ளதாலும், நல்ல விலை கிடைப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலை வட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துப் போன தால் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவுக்கு பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உடுமலை வட்டத்தில் உள்ள தளி, தீபாலபட்டி, வாளவாடி, மொடக்குப்பட்டி, போடிபட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் பீட்ரூட் சாகுபடி அதிகரித்துள்ளது. 50 முதல் 60 நாள்களில் விளையும் பயிரான பீட்ரூட் இறங்காட்டு பூமி அதிகம் உள்ள கிராமங்களில் கடந்த செப்டம்பர் மாதம் நான்காவது வாரத்தில் பயிரிடப்பட்டன. தற்போது இவை நல்லமுறையில் விளைந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது.
ஏக்கருக்கு 500 முதல் 700 கிலோ பீட்ரூட் வரையே கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போ து 1 டன் வரை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. மேலும், பீட்ரூட்டுக்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பீட்ரூட் விவசாயிகள் கூறியதாவது:
பீட்ரூட் விளைச்சலைப் பொருத்து உள்ளூரில் விற்றது போக கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது நல்ல விளைச்சல் உள்ளதால் கேரளத்துக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. சாதாரண காலங்களில் பீட்ருட் கிலோ ரூ. 10 முதல் 20 வரையே விற்கும். தற்போது ரூ. 30 முதல் ரூ.40 வரை விற்பனையாகிறது. ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்தோம். இந்நிலையில் தற்போது நல்ல விலை கிடைத்து வருவது மகிழ்ச்சியாக உள் ளது என்றனர்.